இறுதிப்போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.
சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் A அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் B அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் தடை செய்யக் கோரி பொலிஸாரால் இன்று A அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இலங்கை குற்றவியல் சட்டம் 106ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த A அறிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.
நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் B அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய A விண்ணப்பத்தை நிராகரித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பார்கள் என்ற அடிப்படையில் A அறிக்கையின் அடிப்படையில் தடை உத்தரவுகள் தனிநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முள்ளிவாய்க்கால்